வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள்!!!

sarumathil tangiyulla azhukkukalaib bokka uthavum sila
அழுக்குகளானது சருமத்தில் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலும் சுருக்கங்கள் விழும் பகுதியில் தான் அழுக்குகள் அதிகம் சேரும். அதில் குறிப்பாக கழுத்து, மூட்டுகள், அக்குள் மற்றும் பல கண்ணுக்கு தெரியாத பகுதிகளில் அதிகம் சேரும். அழுக்குகள் சரியாக போகாமல் இருந்தால், அவ்விடங்கள் கருமையாக மாற ஆரம்பிக்கும். இப்படி இந்த இடங்களில் சேரும் அழுக்குகள் குளித்தால் போகாது. மாறாக வாரம் ஒரு முறை ஸ்கரப்பிங், கிளின்சிங் போன்ற முறையை தவறாமல் செய்து வந்தால், அழுக்குகளை போக்கலாம். அதற்கு கடைகளில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அப்படி பணத்தை செலவழித்து அவற்றை பயன்படுத்தி, அதனால் சில சமயங்களில் சருமத்தில் பிரச்சனைகளை சந்திப்பதை விட, இயற்கை முறை என்னவென்று தெரிந்து கொண்டு,
அவற்றைப் பின்பற்றினால், அழுக்குகளை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் போக்கலாம். இங்கு சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!! ஆயில் மசாஜ் வாரம் ஒருமுறை வெதுவெதுப்பான எண்ணெயால் உடல் முழுவதும் நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் சுடுநீரில் குளித்தால், சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் நீங்குவதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். பாடி லோசன் அழுக்கு உள்ள பகுதியை நீரால் நனைத்து, பின் அவ்விடத்தில் பாடி லோசனை எடுத்து தடவி, மசாஜ் செய்ய வேண்டும். பின் நகங்களைக் கொண்டு சருமத்தில் உள்ள அழுக்குகளை எடுக்கலாம். இதனால் அழுக்குகள் முற்றிலும் வந்துவிடும். ஈரமான துணி ஈரமான துணியை நீரில் நனைத்து பிழிந்து, பின் அதனைக் கொண்டு உடலைத் மென்மையாக துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் அழுக்குகள் தங்காமல் இருக்கும். எலுமிச்சை ஸ்கரப் எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். ஆகவே ஒரு எலுமிச்சை துண்டை, உப்பில் பிரட்டி, பின் அழுக்கு நிறைந்த இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்தால், அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும். சுடுநீர் குளியல் தினமும் சுடுநீரில் குளித்து வந்தால், அழுக்குகள் தங்காது. அதிலும் அப்படி குளிக்கும் போது நன்கு ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து குளிக்க வேண்டும். ஓட்ஸ் ஓட்ஸ் உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடல் அழகைப் பராமரிக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. அதுவும் சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்க ஓட்ஸ் உதவி புரிகிறது. அதற்கு ஓட்ஸை பால் அல்லது தயிரில் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். சர்க்கரை இதுவும் மற்றொரு சிறப்பான வழி. அதற்கு ஈரமான சருமத்தை சர்க்கரை கொண்டு ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும்.

பிறவியில் போதைக்கு அடிமையாகி பிறக்கும் குழந்தைகள் அதிர்ச்சி தகவல...!!!!!!!!!!


இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளன. கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்குகின்றன.

ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே இந்த தாக்கம் காணப்படுவதாகவும், கருவுற்ற நிலையில் இந்த குழந்தைகளின் தாய்கள் ஹெராயின், கொக்கைய்ன் போன்ற கொடிய போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததால், எந்தப் பாவமும் அறியாத அப்பாவி குழந்தைகளின் ரத்தத்திலும் இந்த போதைப் பழக்கம் பரவி விடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

பெண்களின் கொடிய போதைப் பழக்கம் அவர்களை மட்டுமின்றி, அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகள், குடும்பம், உறவினர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாழ்படுத்தி விடுவதாக ஆய்வுக் குறிப்புகள் கவலை தெரிவித்துள்ளது.

புதன், 27 ஆகஸ்ட், 2014

குடலுக்குள் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள்; வெளிவரும் அதிர்ச்சி கலந்த பல ஆச்சரியங்கள்!!


நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும் “சுத்தம் சோறு போடும்” அப்படீன்னு! ஆனா, அந்த சுத்தத்துக்கு முதல் எதிரி கிருமிகள். கிருமிகள்னா கண்ணுக்கு தெரியுற கிருமிகள் மட்டுமில்ல, கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களான புழுக்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் இதெல்லாம் சேர்த்துத்தான்.
நமக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும், நம்ம உடலோட ஒட்டி உறவாடுற நுண்கிருமிகள்ல முதன்மையானது பாக்டீரியாக்கள்தான். ஏன்னா, நம்ம உடலின் தொடக்கமான தலைகள்ல ஆரம்பிச்சு கால்கள் வரைக்கும் மிகவும் அதிகப்படியான எண்ணிக்கையில், 24 மணி நேரமும் நமக்கு தெரியாமலேயே நம்முடலுடன் ஒட்டி உறவாடுகின்றன இந்த பாக்டீரியாக்கள்.
இந்த பாக்டீரியாக்கள்கிட்ட என்ன பிரச்சினைன்னா, “சரி பாக்டீரியாக்கள் உடம்புக்கு கெடுதல்தானே”ன்னு மருந்துகள பயன்படுத்தி உடலிலுள்ள மொத்த பாக்டீரியாக்களையும் அழிச்சுட முடியாது. அப்படி அழிச்சிட்டாலும் அதுவும் நமக்கு கெடுதல்தான்.
“என்னடா இவன், இப்படியும் சொல்றான் அப்படியும் சொல்றானே, ஒரே குழப்பமா இருக்குதே”ன்னு யோசிக்கிறீங்களா?
உண்மைதான். சரி, ஏன் பாக்டீரியாக்கள் எல்லாத்தையும் அழிக்க கூடாதுன்னு கொஞ்சம் விளக்கமா பார்க்கலாம் வாங்க……
அதுக்கு முன்னாடி பாக்டீரியா பத்தின இந்த பதிவை படிச்சிடுங்க!
அதாவது, மனித உடலுடன் தொடர்புடைய பாக்டீரியாக்கள்ல இரண்டு வகை உண்டு. ஒன்னு, மனித உடலிலுள்ள உணவிலிருந்து சத்துக்களை சாப்பிட்டுவிட்டு, மனித உடலின் ஆரோக்கியத்துக்காக பல ரசாயன மாற்றங்களை செய்யும் “நல்ல பாக்டீரியா. இவை நம் எல்லாருடைய குடலிலும் இருக்கின்றன. இவற்றுக்கு ஆங்கிலத்தில் Gut microflora என்று பெயர். குடலிலுள்ள இவற்றின் எண்ணிக்கை என்ன தெரியுமா? உங்களில் யாருக்காவது தெரிஞ்சா மறுமொழி சொல்லுங்க பார்ப்போம்.
இரண்டாவது வகை, சுற்றுச்சூழலிலிருந்து பல வழிகளில் மனித உடலுக்குள் ஊடுருவி, மனித உணவின் எச்சங்களை உண்டுவிட்டு, அதே மனித உடலுக்கு குடற்புண் (அதாங்க அல்சர்!) உள்ளிட்ட பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் குணாதீசியம் கொண்ட கெட்ட பாக்டீரியா! அதாங்க இந்த, “உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றது” அப்படீன்னு சொல்லுவாங்களே அந்த வேலையை பொறுப்பா செய்யுற ரொம்ப ரொம்ப கெட்ட பாக்டீரியா.
சரி, இப்போ உங்களுக்கு, “பாக்டீயாக்கள் எல்லாமே கெட்டது இல்ல, அதுல நல்ல பாக்டீரியாக்களும் இருக்கு. அதுவும் நம்ம குடலுக்குள்ள ஒரு ஓரத்துல (?), நாம சாப்பிடுற சாப்பாட்டுல இருக்குற மிச்சம் மீதிய சாப்பிட்டுட்டு, நமக்கு நல்லதுதான் செய்யுது” அப்படீன்னு தெரியும் இல்லீங்களா.
இனி, நம்ம குடலுக்குள்ள இருந்து நல்லது செய்யுற அந்த பாக்டீரியாக்கள் அப்படி என்னதான் நல்லது செய்யுது, அந்த நல்லதுனால நமக்கு/நம்ம உடலுக்கு என்னென்ன நன்மைகள்/தீமைகள் இருக்குன்னு, சமீபத்திய ஒரு ஆய்வு முடிவுகளோட வெளிச்சத்துல கொஞ்சம் விரிவா பார்ப்போம் வாங்க……
குடலுக்குள்ளே பாக்டீரியாக்கள்: உண்ட வீட்டுக்கே ரெண்டகமா?!
"குடல்வாழ் பாக்டீரியா"
நம்ம ஒவ்வொருத்தரோட குடலுக்குள்ளேயும் சுமார் 1000 ட்ரில்லியன் பாக்டீரியாக்கள் குடியும் குடித்தனமுமா இருக்குதாமாம். என்ன, “ஐயய்யோ, என் குடலுக்குள்ளே இவ்வளவு பாக்டீரியாக்களா?” அப்படீன்னு அரண்டு துள்ளிக்குதிக்கிறீங்களா? ஒன்னும் கவலைப்படாதீங்க, எல்லாம் நம்ம கூட்டாளிங்கதான்னு சொல்ல முடியாதுன்னாலும், அதுல முக்கால்வாசி பாக்டீரியாக்கள் நமக்கு நல்லதுதாங்க செஞ்சிக்கிட்டு இருக்குங்க…..
உதாரணமா,
  • நாம உண்ணும் உணவிலிருக்கும் சக்தியை பிரித்தெடுப்பது
  • நம்ம உடலை தொற்றுக்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது
  • குடல் உயிரணுக்களுக்கு போஷாக்குகளை அனுப்புவது
இப்படி நம்ம உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான பல வினைகளைத்தான் செய்கின்றன பெரும்பான்மையான குடல்வாழ் பாக்டீரியாக்கள். இப்படி நல்லது செஞ்சுக்கிட்டிருக்கிற பாக்டீரியாக்கள, தெரிஞ்சோ தெரியாமலோ நாம தொந்தரவு செஞ்சுட்டா, உதாரணமா நுண்ணுயிர்கொல்லிகளான ஆண்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிட்டால், இம்மருந்துகள் குடல் பாக்டீரியாக்களைக் கொன்று, குடலுக்குள் ஒரு கலவரமான நிலையை உருவாக்கிவிடுகின்றன. அதுமட்டுமில்லாம, சூப்பர் கிருமி என்றழைக்கப்படும் Clostridium difficile எனும் பாக்டீரியாவினால் உருவாகும், உயிருக்கே ஆபத்தான காலிட்டிஸ் நோய்கூட தோன்றிவிடக்கூடுமாம். யப்பாடி…..!
அதெல்லாம் பழைய கதைங்க, இப்போ புதுசு கண்ணா புதுசு அப்படீங்கிற மாதிரியான மேட்டர் என்னன்னு கேட்டீங்கன்னா…..
குடல்வாழ் பாக்டீரியாக்களும் மூளை கோளாறுகளும்!
இதுவரைக்கும், குடல்வாழ் பாக்டீரியாக்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த குறைபாடுகளான குடல் நோய்கள் போன்றவற்றை மட்டுமே உருவாக்கக்கூடியவை அப்படீன்னு நெனச்சிக்கிட்டு இருந்தாங்க ஆய்வாளர்கள். ஆனா, குடல்வாழ் பாக்டீரியாக்கள் குடல் நோய்கள் மட்டுமில்லாம, மூளையில் நிகழும் பல வேதியல் மாற்றங்களை பாதித்து, பழக்கவழக்கம் சார்ந்த குறைபாடுகள் மற்றும் உளவியல் நோய்கள்போன்றவற்றையும் உருவாக்கக்கூடியவை அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்காங்க கனடா நாட்டின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்!
ஐயய்யோ, இது என்ன புதுசா ஒரு குண்டைத் தூக்கி போடறாங்களே இவிய்ங்க அப்படீன்னு யோசிக்கிறீங்களா?
உண்மைதாங்க. குடல்வாழ் பாக்டீரியாக்களின் சமநிலை, எண்ணிக்கை மற்றும் இயல்பு வாழ்க்கை ஆகியவற்றை பாதிக்கும் கிருமி தொற்றுகள் மற்றும் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளான ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளால், குடல் தொடர்பான நோய்கள் மட்டுமே ஏற்படும் என்னும் இதுவரையிலான நம்பிக்கை பொய்யாகிவிட்டது! மாறாக, குடல்வாழ் பாக்டீரியாக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால், மூளை சம்பந்தமான குறைபாடுகளான பழக்கவழக்க மாற்றங்கள், மனச்சோர்வு மற்றும் படபடப்பு ஆகியவையும் ஏற்படும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது!

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

இதயம் செயல்படும் முறை

 
நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர்.

இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும். 

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையீரலுக்குச் செல்கின்றன. அங்கு, உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வாயுவால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. வெளி விடும் மூச்சுக் காற்றின் மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம், இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், பெருந்தமனி மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது இப்படி இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது.

இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது ?


நமது உடலில் உறுப்புகளில் பெரும்பா லானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதவாது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கி னால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும்.

ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் திசுக்களுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போது மான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த    மனித உடலே இறந்துகோகும்.

இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்த இயங்குகிறது. 



இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஏன்? இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரி-ரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்து கின்றன.

இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

ஹார்மோன் செயல்பாடுகள் : 
அட்ரீனலின் - இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, ரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

தைராக்ஸின் - இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்சிதை மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

பிற காரணங்கள் : சிரைக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தும், ரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்க வோ, குறைக்கவோ செய்யும்.

இதயத் துடிப்பு எவ்வாறு ஏற்படுகிறது ? இதயத்தின் இயக்கத்தைப் போலவே, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதில் நரம்பு மண்டலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்தில் இருந்து வரும்
நரம்புகள் இதயத்தில் வியாபித்திருக்கும். இவை, இதயத்தின் வலது பக்க மேல் அறையில் ந.அ. மின் குமிழில் (ந.அ. சர்க்ங்-நண்ய்ர்-அற்ழ்ண்ஹப் சர்க்ங்) குவிந் திருக்கும். இதில் இருந்து தொடர்ந்து மின் னோட்டம் ஏற்படும். இந்த மின்னோட்டம், அருகில் இருக்கும் (மின் குமிழ்) மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் மையமாக அமைந்துள்ள மின் குமிழிக்குப் பரவும். அங்கிருந்து பிரியும் நரம்பிழைகள் மூலமாக வலது மற்றும் இடது கீழ் அறைக்கு மின்னோட்டம் பரவும். இதனால் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.

அதாவது, இதயத் தசைகள் சுருங்கி விரிகின்றன. அதில் உள்ள வால்வுகள் மூடித் திறக்கின்றன. இவ்வாறு மின்னோட்டத்தை ஏற்ப டுத்தக்கூடிய மின் குமிழ் மற்றும் மின்னோட்ட இழைகளில் கோளாறுகள் ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறையும் அல்லது அதிகரிக்கும் அல்லது சீரில்லாமல் துடிக்கும்.

சாதாரணமாக, ந.அ மின் குமிழ் எத்தனை முறை இதயத்தில் மின்னோட்டத்தைப் பாய்ச்சுகிறதோ அத்தனை முறை இதயத்துடிப்பு இருக்கும். இது சராசரியாக நிமிடத்துக்கு 72 முறையாக இருக்கும். அதாவது, இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு ?
இதயத் துடிப்பு என்பது இதய இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருந்தமனியின் ரத்த ஒட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்ப டுவதே நாடித் துடிப்பு.. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.

இதயத் துடிப்பு எப்போது அதிகமாகும் ? இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்
களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.

உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும்இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைக்கக் விடும்.

இதயத் துடிப்பு எப்போது குறையும் ? தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும்.

ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு என்றும் சொல்வார்கள்.

உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் கோப்பை ஐந்து முறை வென்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜான் போர்க்குக்கு சாதாரண மாகவே இதயம் நிமிடத்துக்கு 38 முறைதான் துடிக்குமாம்.

மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். அதுவே, கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.

இதயத்தின் அமைப்பு இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுரை, வெளிப் புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் நீர் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத்
திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள் ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு வென்ட்ரிகிள் அறைகளை, கீழ்ப்புற இதயத் துடிப்புச் சுவரும் பிரிக்கின்றன.

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. மேலே இருக்கும்
அறைகள் ‘இடது ஆரிக்கிள்’, ‘வலது ஆரிக்கிள் ‘என்றும் கீழே இருக்கும் அறைகள் ‘இடது வென்ட்ரிகிள்’, ‘வலது வென்ட்ரிகிள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

இதய வால்வுகள் : இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும்.
அப்படி தள்ளப்படும் ரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பு வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் ரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன. வலது
ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு மூவிதழ் வால்வு என்றும், இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு ஈரிதழ் வால்வு என்றும் பெயர்.

வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘மூவிதழ் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது ஆரிக்கிள் அறையில் இருந்து இடது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘ஈரிதழ் வால்வு’ தடுக்கிறது.

வலது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, அதிக அறையில் இருந்த ரத்தம் நுரையீரல் தமனியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் பிறைச்சந்திர வால்வு என்று பெயர். அதேபோல், இடது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, பெருந்தமனியில் செல்லும் ரத்தம் திரும்பிவரமால் தடுக்கும் வால்வுக்கு ‘பெருந்தமனி பிறைச்சந்திர வால்வு’ என்று பெயர்.

இதயத்துக்கும் ரத்தம் தேவை : உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஆக்ஸிஜன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே ரத்தத்தைத் தரும் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை மூலம், இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.

இதயம் சுருங்கும்போது, உடலின் பல்வேறு பகுதி களுக்கும் ரத்தம் செல்கிறது. ஆனால், இதயம் விரிவடையும்போது தான் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்கிறது.இதய ஒலிகள் :
இதயம் சுருங்கி விரியும்போது, அதில் உள்ள வால்வுகள் மூடித் திறப்பதன் மூலம், முறையாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நுரையீர லுக்கும் ரத்தம் செல்கிறது. இந்த நிகழ்வு நடை பெறும்போது உருவாவதுதான் இதய ஒலிகள் இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் சாதாரண மாகக் கேட்க முடியாது. அதற்குத்தான்
மருத்து வர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ என்ற கருவி உள்ளது.

இதயத்தில் ஏற்படும் இதய ஒலிகள் மொத்தம் நான்கு. அவை, முதலாவது ஒலி, இரண்டாவது ஒலி, மூன்றாவது ஒலி, நான்காவது ஒலி என்று அழைக்கப்படுகின்றன. ஸ்டெதாஸ் கோப் கருவியைப் பயன்படுத்தி னாலும்கூட, மருத்துவர் களால் இந்த நான்கு ஒலிகளையும் ஒரே நேரத்தில் கேட்க முடியாது. அவர்களால், முதலாவது மற்றும் இரண்டாவது ஒலிகளைத் தான் கேட்க முடியும்

முதலாவது ஒலி : இதய மேல் அறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் வந்த பிறகு, கீழ் அறை களான இரண்டு வென்ட்ரிக்கிள் அறைகளும் சுருங்கத் தொடங்கும். அப்போது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்ளும்.

இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படுவதுதான் முதல் ஒலி.
மூவிதழ் வால்வும், ஈரிதழ் வால்வும் மிகக் குறைந்த கால இடைவேளையில் மூடிக் கொள்ளும். இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படு வதுதான் முதல் ஒலி.

முதல் ஒலியின் அளவு பல்வேறு காரணங்களி னால் மாறுபடக்கூடியது. அதாவது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகளின் அமைப்பு, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பின் தன்மை ஆகிய வற்றைப் பொறுத்து முதல் ஒலியின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.

இரண்டாவது ஒலி : கீழ் அறைகள் இரண்டும் சுருங்கிய பிறகு, பருந் தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வழியாக ரத்தம் வெளியேறிய பிறகு, இதயத்துக்குள் மீண்டும் வந்த ரத்தம் கீழ் அறைகளுக்கு வராமல் தடுக்க பெருந்தமனி வால்வும், நுரையீரல் பெருந்தமனி வால்வும் மூடிக்கொள்ளும். அப் போது ஏற்படுவதுதான் இரண்டாவது ஒலி. இதயத்தின் அடிப்பகுதியில் இந்த ஒலி நன்றாகக் கேட்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது,இந்த இரண்டாவது ஒலியின் அளவு அதிகமாக இருக்கும். பெருந்தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வால்வுகளில் கால்சியம் படிந்து இறுகி, அவை சரியாகச் செயல்படாமல் போகும் போது ஒலியின் அளவு குறைவாக இருக்கும்

மூன்றாவது ஒலி : இதய கீழ் அறைகள் விரிவடைந்திருக்கும்
போது, மேல் அறையில் இருந்து ரத்தம் பாயும்போது ஏற்படுவதுதான் மூன்றாவது ஒலி. இது, மிகவும் மெல்லிய ஒலியாகும். இரண்டாவது ஒலியைத் தொடர்ந்து 0.15 விநாடிக்குப் பிறகு இது ஏற்படும். சிறுவர், சிறுமியர், இளம் வயதினர், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்த மூன்றவது ஒலி ஏற்படும். இதயம் செயலிழப்பு, இதயத் தசை நோய் போன்றவை இருந்தாலும் இந்த ஒலி கேட்கும்.

முதல் இரண்டு ஒலிகளோடு இந்த மூன்றா வது ஒலியும் சேர்ந்து கேட்கும்போது, குதிரை ஓடும் போது ஏற்படும் சத்தத்தைப்போல் இருக்கும்.

நான்காவது ஒலி : மூன்றாவது ஒலியைப்போல் இதுவும் மூன்றாவது மெல்லியதாகும். வென்ட்ரிகிள்
அறை விறைத்த நிலையில், மேல் அறைகள் அதிகமாகச் சுருங்கி கீழ் அறைகளுக்கு ரத்தத்தைத் தள்ளும்போது (அற்ழ்ண்ஹப் இர்ய்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்) இந்த ஒலி ஏற்படும். இதைச் சாதாரண நிலையில் கேட்க முடியாது.

இதயத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் மட்டுமே கேட்கும். இதயம் செயலிழப்பு, இதயச் செல்கள் அழிதல், இதய கீழ் அறைகள் வீங்கி, விறைத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் இந்த ஒலி கேட்கும்.

பிற இதய ஒலிகள் : மேலே சொன்ன நான்கு இதய ஒலிகள் தவிர, இதயத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால் அவற்றின் காரணமாகவும் பல்வேறு ஒலிகள் கேட்கும்.

இதய வால்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்தால், அவற்றை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கி விட்டு, உலோகத்தால் ஆன செயற் கை வால்வுகளைப் பொருத்துவார்கள். இந்த உலோக வால்வுகளாலும் ஒலி ஏற்படும். இதை, ஸ்டெதாஸ்கோப் உதவி இல்லாமலேயே, இதயத் துக்கு அருகே காது வைத்துக் கேட்க முடியும்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) உடலில் எவ்வாறு செயல்பெறுகின்றது

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.
ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.
எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity), உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.
இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)
இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.
அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.
தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity) இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.
உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. 
எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது? நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன.
காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.
புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.
வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன. நோய் எப்போது ஏற்படுகிறது? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.
நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில:
1. பலகீனமான உடலமைப்பு
2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்
3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது
4. மது, போதைப்பொருள் பழக்கம்
5. புகைப்பழக்கம்
6. தூக்கமின்மை
7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.
நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.
கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். 
கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும். 
மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.
அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.
வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.
காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.
நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ ஆலோசனைகள் சில...

“அம்மா!” எனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது. இணையான உள்ளமும் கிடையாது.  ”பிறந்த குழந்தையை பிரசவித்த மறுகணம் தாயின் வயிற்றில் வைத்தால், அது தாயின் மார்பைப் பற்றி தன் முதல் சீம்பாலினை உறிஞ்சத் துவங்கும். யாரும் அதனை வழிகாட்ட வேண்டியதில்லை” என்ற செய்தி தரும் கவித்துவமும், வியப்பும் ஏராளம்.
குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான். பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. இதனால்தான் குறைந்தது 6 மாதங்கள் வரையாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே… என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல; அம்மாவுக்குமேகூட பலவிதங்களில் நல்லது. பின்னாளில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இதனால் பெரிதும் குறைகிறது. சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற தாய்ப்பால் கொடுப்பது உதவும். தவிர, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனத்திருப்தி அவளது வாழ்க்கையின் பிற விஷயங்களிலும் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.
தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.
மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடுத்த மாதங்களில் 500லிருந்து 600 மில்லிலிட்டர் பால் சுரக்கும். 
தாய் எனும் சொல்லுக்கு தயாரான அந்த பிரசவித்த கணம் முதல் கூடுதல் ஊட்ட உணவு முக்கியம். தாய்ப்பாலின் மகத்துவம் பரவலாக ஓரளவு தெரிந்ததில், “தாய்ப்பால் கொடு கொடு!” என ஊக்குவிக்கும் கணவன் அதைச் சீராக சுரக்கும் தாய்க்கு கொடுக்கும் அக்கறை சில நேரத்தில் கொஞ்சம் குறைவு தான். ஊட்டமான உணவும் உள்ளமும் மட்டும்தான், பாலை சுரப்பித்திட, அந்த அன்னை ஊக்கமாய் சோர்வின்றி இருந்திட உதவும். “பச்சை உடம்புக்காரி” என நம் பாரம்பரியம் அந்த புது அன்னையை பராமரித்த விதம் அலாதியானது; அறிவியல் மெச்சக்கூடியது. 
முதல் ஓரிரு மாதங்கள் பத்தியமாய்ச் சாப்பிடச் சொன்னது, தாய்ப்பாலின் குணத்தைக் கூட்ட மட்டுமல்ல, அதை சுரக்கும் அன்னை ஊட்டமாய் இருந்திடவும் தான். அதிக எண்ணெய் பலகாரம், முந்தைய நாள் சமைத்த உணவு, சீரணிக்க சிரமப்படும் பலகாரங்களைத் தவிர்ப்பது முக்கியம். 
0-6 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 550 க்லோரியும்; 6-12 மாத குழந்தைக்கு பாலூட்டும் தாய்க்கு 400க்லோரியும் கூடுதலாக தேவை.  ‘அட! ஏற்கனவே, மகவை சுமக்கும் போது 10கிலோ வெயிட் போட்டாச்சு..இன்னும் சாப்பிடவா?.. நான் வெயிட் குறைக்க டயட் செய்யலாமா?’ என கேட்கும் புது அம்மாக்கள் இன்று அதிகம். புது அன்னை டயட்டிங்கில் போகவே கூடாது.
குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில் புரதச்சத்து தேவைக்கதிகமாக இருக்கிறது. தவிர, அதிலுள்ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது. 
தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம். 
தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தேவைக்கதிகமான பருமனோடு இருப்பதில்லை. 
எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு? எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம்.
தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அறிவுரை, சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் டாக்ரர்கள்.
தமிழர்களின் சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் மூலிகையான பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி அதிகம் உள்ளது. தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது என்பது அனுபவ உண்மை. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
அதனால் போலும் எம்முன்னோர்கள் வேர்க்கொம்பு (திப்பலி), மிளகு, நற்சீரகம், உள்ளி போன்றவற்றை அரைத்து உறுண்டைகளாக்கி பனங்கட்டியுடன் பிள்ளை பெற்ற தாய்மாருக்கு சில நாட்களுக்கு உண்ணக் கொடுக்கின்றார்கள். அத்துடன் அவர்களுக்காக ஆக்கப்பெறும் பத்தியக் கறியிலும், சரக்குத்தூளும், பிஞ்சு முருக்கங்காயும், கீளி மீன்களும், புளுங்கல் அரிசியும் முக்கிய இடத்தைப் வகிக்கின்றன. சில ஊர்களில் கருவாடும் பத்தியக் கறிக்காக எடுத்துக் கொள்கின்றனர்.
பூண்டு தாய்ப்பாலை பெருக்குவதோடு மேலும் பல நன்மைகளையும் நமக்கு தருகிறது. தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு
தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ குறிப்புக்கள் சில..
உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கச் செய்யலாம்.
தாய் தினமும் பசும் பால் குடித்தால் தாய்ப்பால் பற்றாக்குறையே இருக்காது. அதிக புரதசத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பால் கொடுக்கும் முன் தாய் ஓட்ஸ், பிரட்ஃரஸ்க் போன்ற உணவுகளை உட்கொண்டு விட்டு பால் கொடுக்க ஆரம்பித்தால் பால் அதிகமாக சுரக்கும். தாய்க்கும் போதிய சக்தி கிடைக்கும். குறைந்தபட்சம் தண்ணீர் மட்டுமாவது அருந்தி விட்டு தான் பால் கொடுக்க வேண்டும்.
மீன் வகைகளில் சுறா மீனை உட்கொண்டு வந்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். சுறா மீனை புட்டாக அவித்து, அதனுடன் அதிக அளவில் பூண்டு சேர்த்து சாப்பிட வேண்டும்.
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா மற்றும் சிறிய மீன்களும் சாப்பிடலாம்.
சிறிய மீன்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும் மிளகு ஆணம் போல் செய்து சாப்பிடவும். 
காலையில் டிபன் சாப்பிட்ட பின் பாலில் ஓட்ஸ் போட்டு காய்ச்சி குடிக்கவும். அதே போல் இரவும் தூங்கும் முன் ஓட்ஸ் குடிக்கலாம். இவற்றைக் கண்டிப்பாக கர்ப்பகாலத்தின் 7வது மாதத்தில் இருந்து சேர்ப்பது மிகவும் நல்லது... அப்படி முடியவில்லையானாலும் பிரசவித்த பின்பாவது கண்டிப்பாக உண்ண வேண்டும்  வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உளுந்தை பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் அதை சேர்த்து காய்ச்சியும் குடிக்கலாம். இதை காலை வேளையில் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம். வாதம் இருந்தால் சாப்பிடக்கூடாது.
ஓம வாட்டர் என்று கடையில் கிடைக்கும் அதை வாங்கி தண்ணீரில் ஊற்றி குடிக்கலாம்.
ஓம வாட்டர் கிடைக்கவில்லை என்றால் வெறும் ஓமத்தைகூட 2 தேக்கரண்டி எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து கசக்கி உமியை போக்கிவிட்டு இரவு தண்ணீரில்( 1கிளாஸ்) போட்டு ஊறவைத்து காலையில் முழித்ததும் அந்த தண்ணீரைமட்டும் வடித்து எடுத்து குடிக்கவும்.
பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். 
அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். 
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும். 
ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

சனி, 16 ஆகஸ்ட், 2014

24 மணி நேரத்தில் சராசரி மனிதனின்:



இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.
நுரையீரல் 23.045 முறை சுவாசிக்கிறது.
இரத்தம் 16,80,000 மைல்கள் பாய்கிறது.
நகங்கள் 0,00007 அங்குலம் வளர்கின்றன
முடி 0,01715 அங்குலம் வளருகிறது
வாய் 2.9 பவுண்டுகள் நீரை (அனைத்து திரவ உட்பட)அருந்துகிறது
வயிறு 3.25 பவுண்டுகள் உணவு உட்கொள்கிறது.
மூக்கு 438 கன அடி காற்றை சுவாசிக்கிறது.
உடல் 85.60, டிகிரி வெப்பத்தை இழக்கிறது.
வியர்வை சுரப்பிகள் 1.43 pints வியர்வையை உற்பத்தி செய்கிறது.
வாய் 4,800 வார்த்தைகளை பேசுகிறது.
தூக்கத்தின் போது உடல் 25.4 முறை அசைகிறது.


Dehydration
உங்களுக்கு தாகம் எடுக்கவில்லையானால் நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும். ஏனென்றால், ஏதோ ஒரு காரணத்தால் நம் உடலில் உள்ள நீர் சத்துமுற்றிலும் தீர்ந்து விடுமானால் தாகம் எடுக்கும் செயல்பாடு நிறுத்தப்பட்டுவிடுகிறது (the thirst mechanism shuts off).
சுவிங்கத்தை மென்று கொண்டே வெங்காயத்தை உரித்தால், கண்ணில் நீர்வராது.
உங்கள் நாக்கு இளஞ்சிவப்பு (pink)நிறத்தில் இருந்தால் மட்டுமே உங்கள்நாக்கில் கிருமிகள் இல்லையென்று பொருள் அன்றி வெண்மையாக இருப்பின்வெண்படலமாக பாக்டீரியா படர்ந்து இருக்கிறது என்று பொருள்.
ஆச்சர்யமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45சதவீதம் வரை விரிவடைகின்றன.
நாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சிலஇறக்கின்றன.



இருதயத்துக்கு இடமளிப்பதற்க்காக உங்களது இடது பக்க நுரையீரல் வலதுபக்க நுரையீரலை விட சிறியதாக இருக்கும்.

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்




சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.

கட்டிகளை கரைக்கும் சப்பாத்திக்கள்ளி !



நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுட ன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

டிபன்ஸ் மெக்கானிசம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது இரத்த அணுக்களால் தூக்கியயறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டுபண்ணுகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.

இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

மேலும் நாம் தோலை சுத்தமாக வைக்காததால் தோலுக்கடியில் பலவிதமான மலினங்களும் சேருவதால் தோல் தடித்து அதிலுள்ள செல்கள் சேதமடைகின்றன. இவ்வாறு சேதமடைந்த செல்களிலுள்ள நுண்கிருமிகள் வெளியேற முடியாமல் தோல் மற்றும் தோலின் கீழ்ப்பகுதியில் பலவிதமான கட்டிகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு உண்டாகும் கட்டிகள் பெரும்பாலும் தொடை, முதுகு, இடுப்பு, கால், கைகள் மற்றும் புட்டப் பகுதிகளில் உண்டாகுகின்றன.

சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடில்லாதவர்கள், உடல் உழைப்பில்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. லேசான வீக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறும். இது போன்ற தோல் மற்றும் சதை கட்டிகள் வளர்ந்து உடைவதற்கு பல நாட்களாவதுடன் அந்த நாட்கள் வரை வலி, சுரம், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளையும் ஏற்படுத்தும். இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்புண்டு.

இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்குநாள் பெரிதாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் புண்களை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரண கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பழுக்கச் செய்து உடைத்து விடவேண்டும். கட்டியை எளிதாக பழுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடையது மட்டுமின்றி வறண்ட பகுதிகளில் கூட செழித்து, வளர்ந்து காணப்படும் எளிய மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி.

ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.

முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்
.