சனி, 26 ஏப்ரல், 2014

நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க


நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க


உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு 15 மி.கி.க்கு மேல் இருக்க வேண்டும். 

சாதாரணமாக குழந்தைகள் உடலில் ரத்தத்தில் 16 முதல் 18 மில்லி கிராம், ஆண்களுக்கு 12 முதல் 14 மில்லி கிராம், பெண்களுக்கு 10 முதல் 14 மில்லி கிராம் "ஹீமோகுளோபின்' இருக்க வேண்டும். 

10 மில்லி கிராமுக்கு கீழ் ரத்தத்தில் "ஹீமோகுளோபின்' அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.

அதற்க்கு ஒரு சிறந்த வழி உள்ளது. நாட்டு நெல்லிகாய்(பெரிய நெல்லிக்காய்) ஒன்று எடுத்து அதில் சிறு சிறு துளை இட்டு நல்ல தேனில் ஓர் இரவு ஊர விட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்கலாம்.

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். 

மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.

1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

வைட்டமின் "பி' நிறைந்த பேரீச்சம்பழம், இரும்பு சத்து அதிகமான உணவு பொருட்களை கட்டாயம் சாப்பிட வேண்டும். 10 மில்லி கிராம், அதற்கு குறைவாக 9.5 அல்லது 9.8 இருந்தால் மாத்திரை மூலம் சரி செய்து விடலாம். ஒன்பதுக்கு கீழ் குறைந்தால் ரத்தத்தில் "ஹீமோகுளோபின்' அளவு அதிகரிக்க டாக்டர்கள் கூறும் ஊட்டச்சத்தான உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். இவ்விஷயத்தில் கர்ப்பிணிகள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

உடனடியாக இரத்த சோகையை நீங்க

நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப் பிரித்து உட்கொள்ள வேண்டும். 
ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பா‌ல், த‌ண்‌ணீ‌ர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.

தக்காளிச்சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவை மூன்றையும் சம அளவு கலந்து காலை, மாலை இரு வேளையும் 30 மில்லி அளவு குடித்து வர ரத்தம் பெருகும்,

இந்த முறையைப் பின்பற்றி வந்தால் இதயம் வலுவடையும். கல்லீரல் பலம் பெறும். இது காசநோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

இத்தகைய ரத்தச் சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச் சத்துள்ள கீரைகளான, முருங்கைக்கீரை, ஆரைக் கீரை, அரைக்கீரை, புதினா கொத்தமல்லி, கறிவேப்பிலை அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, ரத்தச் சோகை நீங்கும்.
மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது. பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை நீங்கும். 
இர‌த்த சோகை‌ எ‌‌ன்றது‌ம், பல வகையான மா‌த்‌திரைகளை முழு‌ங்‌கி வருவா‌ர்க‌ள். ஆனா‌ல் அத‌ற்கு இய‌ற்கை‌யி‌ன் வர‌ப்‌பிரசாதமான தே‌ன் தா‌ன் ‌நிர‌ந்தர ‌தீ‌ர்வை அ‌ளி‌க்கு‌ம் மரு‌ந்தாகு‌ம்.

த‌க்கா‌ளி‌ச்சாறு, எலு‌மி‌ச்சை சாறு, தே‌ன் இவை மூ‌ன்றையு‌ம் சம அளவு கல‌ந்து காலை, மாலை இரு வேளையு‌ம் 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர ர‌த்த‌ம் பெருகு‌ம், இ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தா‌ல் இதய‌ம் வலுவடையு‌ம். க‌ல்ல‌ீர‌ல் பல‌ம் பெறு‌ம். இது காசநோயா‌ளிகளு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. த‌க்கா‌ளியை ‌தினமு‌ம் ப‌ச்சையாக உ‌ட்கொ‌ண்டு வர ‌சிறு வய‌திலேயே ஏ‌ற்படு‌ம் முக‌ச் சுரு‌க்க‌ங்க‌ள் குணமாகு‌ம், சொ‌ரி, ‌சிர‌ங்குகளு‌ம் ‌தீரு‌ம். த‌க்கா‌ளியை ப‌ச்சையாகவோ, சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌த்தை சம‌ப்படு‌த்து‌ம். மல‌ச்‌சி‌க்கலை‌ப் போ‌க்கு‌ம்.. த‌க்கா‌ளியை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் உட‌ல் உ‌ள் உறு‌ப்புக‌ள் பல‌ம் பெறு‌ம்.

வியாழன், 24 ஏப்ரல், 2014

மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்


'அம்மா நீங்கள் நாளந்தம் கொஞ்சம் நடக்க வேண்டும், மூட்டுகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்' என்றேன்.


'இந்தக் காலோடை எப்படி நடக்கிறது?'

அவளது கேள்வி நியாயம் போலத் தோன்றினாலும் சரியானது அல்ல.

அந்த அம்மா நடந்து வந்த முறையை அவதானித்திருந்தேன். நடக்க முடியாமல் அரங்கி அரங்கி நடந்து வந்திருந்தாள். முழங்கால் வலி, வீக்கம், கொழுத்த உடம்பு வாகை இவை யாவையும் நான் அறிந்ததே. அப்படி இருந்தபோதும் சற்று நடக்க வேண்டும் எனச் சொன்னேன்.

ஏனெனில் பயிற்சி என்பது மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும். அது மூட்டுகளைப் பலமுடையதாக ஆக்கும், அவற்றின் மடங்கி நிமிரும் ஆற்றலையும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும்.

ஆனால் மூட்டுகள் சிவந்து, வீங்கி வலி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நடக்க வேண்டும் என்ற எண்ணமே உங்கள் வலியை மேலும் அதிகரிப்பது போலத் தோன்றுகிறது அல்லவா? அந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் இவற்றோடு நீங்கள் பந்தயத்தில் ஓடப் போவதோ, விளையாட்டு வீரர்கள் போல பயிற்சி செய்யப் போவதோ இல்லையே. சிறிய சிறிய பயிற்சிகளே போதுமானது.

அவை வலியைத் தணிக்கவும், மூட்டுகளை இலகுவாக இயக்குவதற்கும் நிச்சயம் உதவும். மூட்டு வலிகள் ஒருவரைப் பாதித்து நடக்கவோ, இயங்கவோ முடியாது தடுத்து, படுக்கையில் கிடத்த முனையும் போது, பயிற்சிகள் மட்டுமே ஒருவரை இயங்க வைக்கும்.

உடற் பயிற்சிகள் ஏன் அவசியம்

பயிற்சிகள் ஒருவரது மூட்டுகளைப் பாதிக்காத அதே நேரம், பொதுவான உடல் நலத்தை மேம்படுத்துவதுடன் செயலாற்றல் திறனையும் அதிகரிக்கும். மூட்டு நோய்களுக்கான மருத்துவத்தைத் தொடர்வதுடன் பயிற்சிகளைச் செய்வதன மூலம் நீங்கள் கீழ்காணும் நன்மைகளையும் பெறுவீர்கள்.

1. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தும்.
2. எலும்புகளின் உறுதி கெடாமல் பாதுகாக்கும். 
3. நாளாந்த வேலைகளுக்கான பலத்தையும் சக்தியையும் கொடுக்கும்
 
4. இரவில் உடல் உழைவற்ற நிம்மிதியான தூக்கம் கிடைக்க உதவும்.
 
5. உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
 
6. உங்கள் உடல் நலம் பற்றிய நம்பிக்கையூட்டும் உணர்வை வளர்க்க உதவும்.


பயிற்சி செய்வது மூட்டு வலியை அதிகரித்து, மூட்டுகளை மேலும் இறுக்கமடையச் செய்து இயங்கவிடாமல் தடுக்கும் எனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பயிற்சிகள் செய்யாது மூட்டுகளை ஆட அசையாது வைத்திருப்பதுதான் உண்மையில் மூட்டுகளின் வலியை அதிகரித்து இறுக்கமடைய வைக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் மூட்டுகளும் எலும்புகளும் திடமாக இருப்பதற்கு சுற்றியுள்ள தசைகள் பலமாக இருப்பது அவசியம். அவை திடமாக இருந்து போதிய ஆதரவையும் பக்கபலத்தையும் கொடுக்கவில்லை எனில் மூட்டுகள் சிதைவடைவதற்கும் எலும்புகள் உடைவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

மருத்துவ ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்

உங்களது மூட்டு வருத்தம் எத்தகையது, அதற்கான சிகிச்சை என்ன, அதற்கு எத்தகைய பயிற்சிகள் சிறந்தவை என்பதை உங்கள் மருத்துரின் ஆலோசனையுடனே ஆரம்பிக்க வேண்டும். அல்லது அதற்கென பயிற்சி பெற்ற பயிற்சியாளர் (Physiotherapist) ஆலோசனையுடன் தொடங்கலாம். உங்களது மூட்டுவலி எத்தகையது, அது எந்தெந்த மூட்டுகளைப் பாதித்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அதிக பலனைக் கொடுக்கும் அதே நேரம் வலியை அதிகரிக்காத பயிற்ச்சி எது என்பதைத் தீர்மானிப்பார்.

பயிற்சி வகைகள்

மூட்டுகளின் செயற்பாட்டு எல்லைகளை அதிகரிப்பதற்கான பயிற்சி

ஓவ்வொரு மூட்டிற்கும் அதன் செயற்பாட்டிற்கான பரப்பு (Range) இருக்கிறது. மூட்டு நோய்கள் ஏற்படும்போது அது பொதுவாக குறைந்துவிடும். உதாரணத்திற்கு வழமையாக உங்கள் கைகளை நேராக தலைக்கு மேல் உயர்த்த முடியும். ஆனால் இறுகிய தோள் மூட்டு (Frozen Shoulder) போன்ற நோய்களின் போது அவ்வாறு முழுமையாக உயர்த்த முடியாதிருக்கும்.

இந் நிலையில் உங்கள் உள்ளங்கைகளை சுவரில் வைத்து அழுத்தியவாறு, படிப்படியாக உயர்த்திக் கொண்டு செல்லுங்கள். இதனை தினமும் பயிற்சியாகச் செய்து வரலாம். இதே போல உங்கள் கைகளை முன்பக்கம், பக்கவாடு, பிற்பக்கம் என திருப்பி உயர்த்தலாம்.

மணிக்கட்டு வலிக்கு படத்தில் காட்டியபடி செய்யலாம்.

இதே போல நோயுள்ள எல்லா மூட்டுகளினதும் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்க பயிற்சிகள் செய்வது அவசியம்.

தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகள்

இந்தப் பயிற்சிகள் நோயுற்ற மூட்டைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தி அதன் மூலம் அவற்றிக்கு பாதுகாப்பளிக்கும். ஒவ்வொரு மூட்டைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் இவ்வாறு செய்யலாம். உதாரணமாக உங்கள் முழங்காலுக்கு பலம் கொடுக்க வேண்டுமாயின் அதன் கீழ் ஒரு டவலை சுருட்டி வைத்து அதனை முழங்காலால் அழுத்துங்கள். 5 செகண்ட் ரிலக்ஸ் பண்ணிவிட்டு மீண்டும் செய்யுங்கள் இவ்வாறு தினமும் 50 தடவைகள் ஒவ்வொரு முழங்காலுக்கும் செய்யவேண்டும். வலி கடுமையாக இருந்தால் ஒரு நாள் ஓய்வு கொடுத்துச் செய்யுங்கள்.

மற்றொரு பயிற்சி. கதிரை அல்லது கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு உங்களது குதிக்கால் நிலத்தில் படுமாறு வைத்துக் கொண்டு, இடது காலை நீட்டுங்கள். நிமிர்ந்து உட்காரந்திருந்த நீங்கள் இப்பொழுது சற்று முற்புறமாகக் குனியுங்கள். ஆதன்போது உங்கள் காலின் பின்பறம் இறுகுவதை உணரலாம். 20-30 செகண்டுகள் அவ்வாறு இறுகப் பிடித்தபின் சற்று ஆறிய, வலது காலுக்கும் அவ்வாறு செய்யுங்கள்.

பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்

மேலே கூறியவை குறிப்பிட்ட மூட்டுகளுக்கான பயிற்சிகள். ஆயினும் உங்கள் முழு உடலும் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியமாகும். இதற்கு தினசரி பயிற்சிகள் செய்ய வேண்டும். இத்தகைய பயிற்சிகள் உங்கள் இருதயத்தை திடமாக்கும், சுவாசத்தை இலகுவாக்கும், எடையைப் பேண உதவும். உடலுக்கு மேலதிக சக்தியைக் கொடுக்கும்.

விரைவு நடை, நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை அத்தகையவையாகும். 20முதல் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

வாரத்தில் 3-4 நாட்களுக்காவது செய்வது அவசியமாகும். ஒரே தடவையில் செய்ய முடியவில்லை எனில், 2 அல்லது 3 தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள்.


மூட்டு வலிக்கு உதவக்கூடிய ஏனைய முயற்சிகள்


மூட்டு வலிகள் இருந்தால் அவற்றின் வலியைத் தணிக்கவும், செயற்பாட்டு எல்லைகளை அதிகரிக்கவும் செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். நீங்கள் செய்ய வேண்டிய ஏனைய முயற்சிகள் இதோ.
ஏனைய முயற்சிகள்

இவற்றைத் தவிர உங்கள் உடலுக்கு அசைவியகத்தை கொடுக்கக் கூடிய எந்த வேலையையும் செய்யத் தயங்காதீர்கள். அது சிறிய பணியாக இருந்தால் கூட நிச்சயம் உதவும். யோகா போன்ற பயிற்சிகள் கூட நல்லதுதான். சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்.

ஏனைய உதவிக் குறிப்புகள்

பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது படிப்படியாக ஆரம்பியுங்கள். அதிலும் முக்கியமாக சிலகாலம் பயிற்சிகள் இல்லாதிருந்துவிட்டு ஆரம்பிக்கும் போது திடீரென முழு வீச்சில் செய்யக் கூடாது. திடீரென கடுமையாகச் செய்தால் வலி குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கக் கூடும். எனவே Slow and Steady யாகச் செய்யுங்கள்.

பயிற்சிக்கு முன்னர் நீங்கள் பயிற்சி கொடுக்க இருக்கும் மூட்டுகளுக்கு சற்று வெப்பம் கொடுப்பது நல்லது. சுடுநீரில் நனைத்த துணியால் ஒத்தணம் கொடுங்கள், அல்லது Hot water bagனால் சூடு காட்டுங்கள்


அல்லது Infra Red Light பிடியுங்கள். அவ்வாறு 15-20 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். சூடு மூட்டுகளையும் தசைகளையும் சற்றுத் தளரச் செய்து நீங்கள் பயிற்சியை ஆரம்பிக்க முன்னரே வலியைச் சற்றுத் தணிக்கும்.

வெப்பமான நீரில் குளிப்பதும் உதவக் கூடும். மிதமான வெப்பமாக இருக்க வேண்டுமே ஒழிய கடும் சூடாக இருக்கக் கூடாது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தினமும் பயிற்சிகளை ஆரம்பிக்கும்போது உங்கள் மூட்டுகளை மெதுவாக அசைத்து, அவற்றிற்கான எளிய சுலபமான இதமான பயிற்சிகளை முதலில் செய்யுங்கள்.

இவ்வாறு 10 நிமிடங்கள் செய்த பின் தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்யுங்கள்.

அதன்பின்தான் வேகநடை, நீச்சல் போன்ற கடுமையான பயிற்சிகளுக்குப் போக வேண்டும்.

பயிற்சிகளைச் செய்யும்போது வலி எடுத்தால் சற்று ஓய்வு கொடுங்கள்.

சுருக்கென தாக்கும் கடும் வலி எடுத்தால் பயிற்சியை நிறுத்தி அடுத்த நாளுக்கு ஒத்தி வையுங்கள். பயிற்சியின் போது மூட்டுக்கள் சிவந்து வீங்கினாலும் அவ்வாறே நிறுத்துங்கள்.

பயிற்சியின் போது வீங்கி வலித்த மூட்டுகளுக்கு பயிற்சி முடிந்தபின் ஐஸ் வைப்பது உதவும். 10-15 நிமிடங்களுக்கு வையுங்கள்.

பயிற்சிகளின் போது உங்கள் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்கள் மூட்டுகளால் தாங்க முடியாத கடும் பயிற்சிகளை அதற்குக் கொடுக்காதீர்கள். ஆரம்பத்தில் சொன்னதுபோல படிப்படியாக பயிற்சியை அதிகரியுங்கள், அதன் வேகத்தையும், செய்யும் நேரத்தையும்.

சற்றுக் காலம் நீங்கள் இயங்காதிருந்தால், அல்லது பயிற்சிகளை நிறுத்தியிருந்தால், மீண்டும் ஆரம்பிக்கும் போது மூட்டுகளில் சற்று வலி எடுக்கலாம்.

ஆயினும் அவ்வலி ஒரு மணிநேரத்திற்கு மேலாகவும் நீடித்தால் பயிற்சி சற்று அதிகமாகிவிட்டதாகக் கொள்ளலாம். எதற்கும் உங்கள் மருத்துவருடன் அவ்வலி இயல்பானதுதானா அல்லது நோயின் காரணமாகவா எனக் கலந்தாலோசிக்கலாம்.

எதற்கும் பயிற்சிகளை முற்றாக நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள். 

குழந்தையின் வளர்ச்சி

ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள் (பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது)

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.


உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.

இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.

அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது (mile stone) தாவழப் தொடங்குதல் .

இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறுகிறது. 
  1. அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழுதல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR)
  2. சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், )(SOCIAL)
  3. நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை(FINE MOTOR)
  4. பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி(SPEECH AND HEARING )


இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப் படிமுறைகளை பார்ப்போம்.

  1. தலைய நேராக வைத்திருத்தல் (head control ) ------- 4 மாதம்
  2. குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) ------- 3 - 6 மாதம்
  3. துணையாக நாம் பிடித்துக் கொள்ளும்போது இருத்தல் -------5 மாதம்
  4. எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ------- 6மாதம்
  5. தவழுதல் -------- 8மாதம்
  6. எழுந்து நிற்றல் -------- 9மாதம்
  7. பிடித்துக் கொண்டு நடத்தல் ---------10மாதம்
  8. துணையின்றி நடத்தல் ---------12மாதம்
  9. ஓடுதல் -------- 15மாதம்
  10. ஒரு பந்தை உதைத்தல் -------- 24மாதம்
  11. மூன்று சக்கரங்களைக் கொண்ட வண்டியை மிதித்தல் --------36மாதம

மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..

அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்

  • தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
  • குப்புறப் படுத்திருக்கும் போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
  • அசையும் பொருள் அல்லது நபர்களை தொடர்ச்சியாக பார்த்தல் 

உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்பந்தமானவை

  • ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல் 
  • நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்தல்
  • நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்

ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தமானவை

  • இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல் 
  • தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை எட்டிப் பிடித்தல் 
  • சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
  • விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொரு கைக்கு மாற்றுதல் 
  • தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்

உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்தமானவை

  • சாப்படைக் கொடு போகும் போது வாயைத் திறத்தல் 
  • மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித்தல்

பேச்சு


  • நெருக்கமானவர்களின் முகங்களை அறிந்து கொள்ளுதல் 
  • தொந்ததரவுக்கு உள்ளாகும் போது அழுதல்
  • கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்

ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்

அசைவு சம்பந்தப்பட்டது

  • சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
  • சிறிய உணவுத்துண்டுகளை தானாகவே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடுதல்
  • துணையின்றி சில அடிகள் நடத்தல்

உணர்ச்சி சம்பந்த பட்டவை

  • மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல் 
  • இசையை கேட்டு சிறிய உடல் அசைவுகளைக் காண்பித்தல்
  • தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்

பேச்சு

  • அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்குதல்
  • வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்
  • மற்றவர்களோடு பேச முயற்சித்தல் 
  • வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல் 
  • பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைகளை உணர்ந்து கொள்ளுதல்

கருப்பை கட்டிகள் !பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது ..

கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (cancer)என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் , எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது கட்டாயம.

இங்கே நான் கருப்பையில் வருகின்ற கட்டிகள் பற்றி ஒரு இடுகையிடுகிறேன்.

கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி அநேகம் பேரானோர் கேள்விப் பட்டு இருப்பீர்கள்.

இந்த பைவ்ரோயிட்(fibroid) எனப்படும் கட்டிகள் என்ன?

இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.

இது அரிதாக ஏற்படுகின்ற நோயா?

இல்லை .இது மிகவும் பொதுவாக அதாவது 45வயதிலே இருக்கும் 100 பெண்களை  எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.

இது புற்று நோயா?

இல்லை. இந்த கட்டி புற்று நோயால் ஏற்படும் கட்டியல்ல. மேலும் இந்தக் கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவானது. இதனால் யாருக்காவது fibroid கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.

இது எத்தனை வயதளவில் ஏற்படும்?

பொதுவாக 40 தொடக்கம் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம்.

இது என்ன வகையான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்?


நான் ஏற்கனவே சொன்னது போல இது எல்லாப் பெண்களிலும் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை.இவை அறிகுறிகளை ஏற்படுத்தும் பொழுது கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.

  • மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்
  • அடிவயிற்றிலே எதோ இருப்பது போன்ற உணர்வு 
  • அடிவயிறு வீங்குதல் 
  • அதிகம் சிறு நீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்
  • நாரிப் பகுதியின் அடிப்பகுதியில்  நோ ஏற்படுதல் 

குழந்தையின்மை ஏற்படுவதற்கு இது காரணமாகலாமா?


ஆம், சில கட்டிகள் கருப்பையின் சுவற்றின் உட்புறமாக (அதாவது உருவாகிய சிசு கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற  இடத்திலே ) இருக்கும் போது குழந்தை சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.

ஆனால் இவ்வாறு ஏற்படுகிற சந்தர்ப்பம் குறைவு .மற்றும் இந்தக் கட்டிகள் இருக்கும் எல்லாப் பெண்களிலும் இது ஏற்படுவதில்லை.(மிகவும் அரிதானவர்களிலேயே ஏற்படும்).
மற்றும் கருப்பையின் உள்புறமாக  இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும் கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதி[ப்பும் ஏற்படுவதில்லை.

இந்தக் கட்டிகளைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்த பின்பு பிரச்சினைகள் ஏற்படுமா?


சில வேளைகளில்.
குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம். இதனால் சிசேரியன் (சத்திர சிகிச்சை) மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம்.

இந்தக் கட்டிகள் இருப்பது எவ்வாறு உறுதி செய்யப்படலாம்?

ஸ்கேனிங் மூலம்

இதற்கான மருத்துவ முறைகள் என்ன?


இது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படலாம். இது அறிகுறிகளை ஏற்படுத்தாத பெண்களிலே அகற்றப் பட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அதிகம் ரத்தம் போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இவை அகற்றப்படலாம்.

இது இரண்டு விதமாக அகற்றப்படலாம் .ஒன்று கருப்பைப் பையோடு சேர்த்து அகற்றுதல்(Hysterectomy)
மற்றது கருப்பைப் பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல்(myomectomy). குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களில் கருப்பைப் பை இருக்க கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.

இது ACUPUNCTURE மற்றும் ACUPRESSURE சிகிச்சை மூலமும் அகற்றப்படலாம்.

நல்ல ஜீரணத்திற்கும் நல வாழ்வுக்கும் செய்ய வேண்டியவை..


1.    பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும். இரண்டு நாட்கள் வரை பசி இல்லாமல் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வெறும் தண்ணீா் அல்லது இளம் சூடான தண்ணீா் அருந்திக் கொண்டிருந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

2.    நாம் ஒவ்வொரு முறை உண்ணும் உணவிலும் ஆறு சுவைகளும் கலந்திருக்க வேண்டும். ( இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம், உவா்ப்பு, துவா்ப்பு. ) ஒவ்வொரு சுவையும் ஒரு உறுப்புடன் தொடா்புடையது. நாக்கு இந்த சுவையை உணரும்போது அந்தந்த உறுப்புகளுக்கு அது சக்தியாக மாறுகிறது. உதாரணமாக இனிப்புச் சுவை வயிறு, மண்ணீரல் தொடா்புடையது. புளிப்புச் சுவை கல்லீரல், கண் இவற்றுடன் தொடா்புடையது. எனவேதான் புளிப்புச் சுவையை நாக்கு உணரும்போது புருவங்கள் சுருங்குகின்றன.

3.    ஆறு சுவைகளுள் இனிப்பு சுவையைத்தான் முதலில் உட்கொள்ள வேண்டும். இதனால் வயிறு செரிமானத்திற்குத் தயாராகி விடுகிறது, உணவை நாம் உண்ண, உண்ண எளிதில் ஜீரணமடைய ஏதுவாகிறது,

4.    நாம் உணவு உண்ணும்போது இரு உதடுகளும் மூடி நன்றாக மென்று உண்ண வேண்டும். இதனால் எச்சில் உணவுடன் நன்கு கலக்க ஏதுவாகிறது. எச்சிலுடன் நன்கு கலந்த எந்த உணவும் உடம்பில் எளிதாகச் ஜீரணமடையும்.

5.    உணவு உட்கொள்ளும்போது பேசுதல், படித்தல், தொலைக் காட்சி பார்த்தல் கூடாது. உண்ணும்போது நம் கவனம் முழுவதும் உணவில் இருந்தால்தான் தேவையான என்சைம்கள் சுரக்கும். இல்லையேல் செரிமானம் பாதிக்கப்படும்.

6.    உணவுக்கு 30 நிமிடத்திற்கு முன், பின் தண்ணீர் குடிக்கலாம். உணவு உண்ணும் நேரத்தில்  தண்ணீா் குடிக்கக் கூடாது. உண்ணும்போது தொண்டை வறண்டிருந்தால் கைப்பெருவிரல், ஆட்காட்டி விரல் இரண்டையும் சின் முத்திரையில் வைத்துக்கொண்டு ( மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்டவும். ) சிறிதளவு தண்ணீா் உள்ளங்கையிலிட்டு  மெதுவாகக் குடிக்கவும். இது தொண்டையின் வறண்ட தன்மையைப் போக்கும்.

7.    குளித்த பின்பு 45 நிமிடம் உணவு உண்ணக் கூடாது. உண்ட பின்பு குளிப்பதானால் 2.30 மணி நேரத்திற்குப் பிறகு குளிக்கவும். உணவு செரிமானமாகக் குறைந்தது 2.30 மணி நேரம் தேவையாகும். அதற்கு முன்பாக குளித்தால் உடல் வெப்பம் தணிந்து செரிமானம் பாதிக்கும். உடம்பில் எந்தச் கூழலிலும் 37 டிகிரி செல்சியஸ் அல்லது 98.4 டிகிரி பாரங்கீட் என்ற   அளவில் சூடு இருக்கும். இதை டிரிபிள் வாமா் என்ற உறுப்பு செய்கிறது. குளிப்பதால் இந்த சமநிலையைப் பாதிக்கிறது. அதை சரி செய்ய மேலே சொன்ன கால அளவு தேவைப்படுகிறது.

8.    ஒவ்வொரு முறை உண்ணும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். இவற்றில் உள்ள அக்கு முனைப் புள்ளிகள் தூண்டப் பெற்று அதனால் செரிமானம் நன்றாக நடைபெற உதவும்.

9.    உண்ண உட்காரும்போது இரு கால்களையும் மடக்கி, சம்மணமிட்டு தரையில் அமா்ந்து உண்ண வேண்டும். நாம் உண்ணும்போது இடுப்புக்கு மேல்தான் கூடுதல் இரத்த ஓட்டம் தேவைப்படும். நடக்கும்போது மட்டும்தான் கால்களுக்கு கூடுதல் இரத்த ஓட்டம் வேண்டும். சோபா, சோ், கட்டிலில் உட்காரும் போதும் கால்களை மடக்கியே உட்கார வேண்டும்.

10.   ஒவ்வொரு உணவின்போதும் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும். முதல் ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தவும்.

11.   காலையில் வெறும் வயிற்றிலும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பும் இரண்டுகப் இளஞ்சூடு வெந்நீா் குடிக்கவும். சிறிது தூரம் நடக்கவும். ( இது மலச்சிக்கல், வயிறு உப்புசம் இருப்பவா்களுக்கு மலம் எளிதாக வெளியேற  உதவும் ) காலையில் வெந்நீா் குடித்த அரை மணி நேரம் கழித்து காப்பி, டீ  குடிக்கவும். பொதுவாக மினரல் வாட்டா் குடிப்பதை முற்றிலும் தவிற்கவும்.

(Health Tips)

மூலிகை மருத்துவம்

தேவையான எளிய  (Health Tips)

இன்று நான் உடல் நலம் சரியில்லாத எனது நெருங்கிய  நண்பரை நலம் விசாரிக்க சென்றேன்.அப்போது அவர் மருத்துவரை அனுகியதாகவும் அவர் சில மாத்திரைகளை கொடுத்ததாகவும்,ஆனால் அதில் 3 நாட்களாகியும் குணமடையவில்லை என்றும் தெரிவித்து கொண்டிருந்த போது அவருடைய 86 வயதாகிய பாட்டிஅவர்கள் காலத்து மூலிகை மருத்துவத்தை பற்றி கூறியதை குறிப்பெடுத்து உங்களுக்கு சுருக்கமாக அளிக்கின்றேன்.இவை அனைத்தும் மிகவும் பயனுள்ள மருத்துவம் ஆகும்.

(முக்கிய  குறிப்பு :- இதுவரை பாட்டியம்மா ஆங்கில மருந்தினை உண்டதில்லையாம் எந்த உடல்நலக்  குறைவு என்றாலும் இயற்கை மருத்துவம் மட்டுமே எடுத்துக்கொள்வாராம். அவர் உடல் சோர்வின்றி நல்ல திடகாத்திரமாகவே உள்ளார்.நண்பரே உடனே அவர்களுக்கு திஷ்டி  சுத்தவும்)

01.தலைவலி போக்க :-

அனைவருக்கும் தலைவலியானது அடிக்கடி ஏற்படும் ஒரு உபாதையாகும் இதனை தீர்க்க ஆங்கில மருத்துவத்தை நாடுவதைவிட பக்க விளைவில்லாத   மூலிகை மருந்தினை நாடலாம்.


நொச்சி இலை
 நொச்சி இலையினை  நசுக்கி,சாறாக்கி நெற்றியில் தடவினால் நொடியில்  தலைவலி குறைவதை உணரலாம் .சற்று நேரத்தில் முழுவதுமாக    தலைவலியானது குணமடையும்.

02.அடிக்கடி ஏற்பபடும்  தும்மல் :-

சிலருக்கு அடிக்கடி தும்பலினால் அதிகம் அவதிப்படுவர் அதனை எவ்வாறு தீர்ப்பது என பார்க்கலாம்.


இஞ்சி தேநீர்( Tea -டீ )
அவர்கள்  தினமும்  காலை மற்றும் மாலை இரு வேலை வெறும் வயிற்றில்இஞ்சி தேநீரினை(Tea )குடித்து வந்தால்.இவ்வாறு அடிக்கடி ஏற்ப்படும் தும்பல் தீரும்.


03.நீர்க்கோர்வை :-

சிலருக்கு ஏற்படும் இந்த நீர்க்கோர்வையினை  சரிசெய்ய சாம்பிராணி புகை போடும் போது அதனுடன் தேங்காய் மட்டை நார், மஞ்சள் தூள் சிறிதளவு கலந்து அதிலிருந்து வரும் புகையை இழுக்க நீர்க்கோர்வை சரியாகும்.


மஞ்சள் தூள்
04 . படை :-

படை பலவகையில் உண்டாவது வியர்வை, தூசு, உடலில் குறைவான எதிர்ப்பு சக்தி மற்றும் சில ஒவ்வாமை மூலம் ஏற்படுகிறது.


பப்பாளி மரம்
 இவற்றை குணப்படுத்த பப்பாளி இலைகளை அரைத்து படையின் மேல் தடவி ,15 நிமிடங்கள் கழித்து அரப்புத்தூள் போட்டு குளிக்கவேண்டும். தினசரி சுண்டை வத்தல் 10 எண்ணம் வறுத்து சாப்பிடவும்.நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் படை மறையும்.

05 . நோய் எதிர்ப்பு சக்தி பெருக:-

உடலில் நோய்கள் அண்டாமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தியினை பெருக்கி கொள்ளவேண்டும்.அதனை பெருக்கிக்கொள்ள பின்வருமாறு செய்யலாம்.


முருங்கை இலை
முருங்கை கீரையினை சமைக்கும் போது அதில் ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலைகளை நன்றாக சுத்தம் செய்து விட்டு முருங்கையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு  சக்தி உண்டாகும்.

06 . காய்ச்சல் :-

நமக்கு அடிக்கடி ஏற்படும் காய்ச்சலினால்  அதிகம்  அவதிப்படுகிறோம்  அதனை போக்க  எளிய வழியினை காண்போம்.



துளசி இலை
 காய்ச்சலை போக்க வேப்பம் பட்டை,துளசி,மிளகு சேர்த்து கஷாயம்  வைத்துக்குடித்தால் காய்ச்சல் குணமடையும்.


துளசி மாடம்
குறிப்பு :- துளசி செடி வெளியிடும் வாயுவானது வான்மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் ஓட்டையினை அடைக்க கூடிய வல்லமை உள்ளதாம்.எனவே தான் அந்தகாலத்தில் நம் பெரியோர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் துளசி மாடம் இருக்க வேண்டும் என கூறினார்களோ! பெரிய அறிவியல் மேதைகள் தான் போலும். அவர்களுக்கு நன்றி.

07 . தொடர் இருமல் :-

இதனாலும் நாம் அதிகம் அவதிப்படுகிறோம் இந்த தொடர் இரும்பலை போக்க தினசரி மாலையில் கல்யாண முருங்கையிலை கொழுந்துகளை பறித்து அடை தட்டி சாப்பிட்டு வந்தால் இருமல் நின்றுவிடும்.


கல்யாண முருங்கை இலை

08.தொற்று நோய்களை தடுக்க :-

காலரா,டைபாய்டு,மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவும் காலங்களில் கீழ் கூறியவாறு செய்து வந்தால் தொற்று நோய் வராமலும் மற்றும் பரவாமலும் தடுக்கலாம்.

ஒரு லிட்டர் குடிநீரில் 25 துளசியினை போட்டு நன்றாக கொதிக்க வைத்து சுத்தமான வடிக்கட்டியில் வடித்து கொண்டு குடித்து வந்தால் இது போன்ற தொற்று  நோய்கள் வராது.

09 . மார்பக வீக்கம் :-

சில இளைஞர்களுக்கு மார்பக வீக்கத்தினால் பெரிதும் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பர். இது அவர்களுக்கான மருத்துவம்.


துவரை

துவரையை நன்றாக அரைத்து வீக்கம் உள்ள மார்பகத்தின் மீது தடவிவர மார்பக வீக்கம் நீங்கும்.

10.சளி தொல்லை நீங்க :- 

மார்பக சளி நீங்க தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையினை  சாப்பிட்டு   வந்தால்  தொடரும் சளி தொல்லை நீங்கும்.


கற்பூரவள்ளி இலை

11 . கண் பார்வை குறைபாடு நீங்க :- 

கருவேப்பிளையினை தினமும் சிறிதளவு பச்சையாக உண்டு வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கி கண் பார்வை அதிகரிக்கும்.


கருவேப்பில்லை இலை
மேற்சொன்ன அத்தனையும் நமக்கு எளிதாக கிடைக்ககூடியவை தான். அதனால் இதனை நாம் தக்க சமயத்தில் சேர்த்துக்கொண்டு பயன் பெறுவோமாக.

'குழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்!

'குழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்!


நாட்டு வைத்தியம்!
'குழந்தைகளுக்கு ஒண்ணுன்னா குடும்பமே சோர்ந்து போயிரும். இதுக்காகத்தேன் கைவசம் எப்பவும் சில மூலிகை சாமான்களை வச்சிக்கிடணும்.

குழந்தைகளின் வாந்தி நிற்க..

வேலிப்பருத்திங்கிற உத்தாமணி இலைச் சாறுல ஒரு கைப்பிடி மிளகை 7 முறை ஊற வைக்கணும் (மிளகுல உத்தாமணிச் சாறை ஊத்தினா கொஞ்ச நேரத்துலயே அவ்வளவையும் உறிஞ்சிக்கிடும். இப்படி ஏழு முறை செய்யணும்). ஊறின மிளகை உலர்த்தி, பொடிச்சு வெச்சுக்கிடணும். இந்தப் பொடியிலருந்து ஒரு சிட்டிகை எடுத்து, அதுல 20லருந்து 40 மில்லி பால்.. இல்லேன்னா தேன் கலந்து கொடுத்து வந்தா, செரியாமை, வாந்தி, மந்தம் எல்லாம் ஓடிப் போயிரும்.

வாந்தி நிக்க இன்னொரு வைத்தியமும் இருக்கு. ஒரு துண்டு வசம்பை நெருப்புல சுட்டு, கருக்கி, அதை ஒரு தேய் தேய்ச்சு, தேன்ல குழப்பி, ரெண்டு, மூணு முறை குழந்தைங்க நாக்குல தடவினா வாந்தி நின்னு, முழு குணம் கிடைக்கும்.

வயிற்று உப்புசம் குணமாக..

சுக்கு, சீரகம், சிறுபுள்ளடி (தரையில் படரும் செடி) எல்லாத்தையும் புளியங்கொட்டை அளவு எடுத்து நசுக்கி, தாய்ப்பால்ல ஊற வைச்சுப் பிழிஞ்சிக்கணும். இதை அரை பாலாடை அளவுக்கு எடுத்து, ஒருமுறை கொடுத்தாலே வயிற்று உப்புசம் சரியாகிடும்.

சிறுசா ஒரு துண்டு பிரண்டைய எடுத்து, அது மேல உப்பைத் தடவி, ஒரு ஓட்டுல வச்சி தீயில காட்டுனா, 'படபட'னு வெடிக்கும். இதை ஒரு டம்ளர் தண்ணியில போட்டு வச்சுக்கணும். குழந்தைகளுக்கு வயிறு உப்புசமா இருக்கிறப்ப இந்தத் தண்ணியில அரை பாலாடை கொடுத்தா, நல்ல பலன் கிடைக்கும்.

வயிற்றுப்போக்கு நிற்க..

சமையலுக்கு உபயோகிக்கிற மஞ்சளை ஒரு கணு (துண்டு) எடுத்துத் தூளாக்கி, சூடு பண்ற கரண்டி.. இல்லேன்னா கடாயில போட்டு வறுத்தா, தீ மாதிரி ஆயிரும். இதுல அரை ஸ்பூன் ஓமத்தைத் தூவினா அது வெடிக்கும். உடனே அரை டம்ளர் தண்ணி ஊத்திக் காய்ச்சி, வடிகட்டி, இதுலருந்து அரை பாலாடை அளவுத் தண்ணிய ஒருமுறை கொடுத்தாலே வயிற்றுப்போக்கு சரியாகிடும்.

வயிற்றுக்கடுப்பு நீங்க..

தாய்ப்பால்ல கடுக்காய்க் கொட்டையை இழைச்சி அரை பாலாடை வீதம் கொடுத்துட்டு வந்தா, வயிற்றுக்கடுப்போட கூடிய பேதி சரியாகிடும்.

''குழந்தை நை நைனு அழுதுக்கிட்டே இருக்கு. டாக்டர்கிட்ட போயும் கேக்கல. எதாவது நாட்டு வைத்தியம் சொல்லுங்களேன்..'' என்று இன்றுவரை கிராமத்துப் பாட்டிகளிடம் வைத்தியம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாம்பார் சாதம் மாதிரி.. பருத்திப் புடவை மாதிரி.. இந்த நாட்டு வைத்தியமும் நம் ஊரில் எவர் கிரீன்தான்.

நமக்கு இங்கே நாட்டு வைத்தியம் தந்திருக்கிற அன்னமேரி பாட்டிக்கு இந்தத் துறையில் 60 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. கடலூர், சாமிப்பிள்ளை நகரைச் சேர்ந்த பாட்டியின் வீட்டைச் சுற்றிலும் காடு போல வளர்ந்து கிடக்கின்றன மூலிகைச் செடிகள். என்ன வியாதி என்றாலும் தீர்வு தேடி பாட்டியைத் தேடி ஓடி வருகிறார்கள் சுற்றுப்புற கிராமத்து ஜனங்கள். வைத்தியம் முழுக்க முழுக்க இலவசம்!

''காசா முக்கியம்? ஜனங்க நோய், நொடி இல்லாம சொகமா இருக்கணும். அதுதேன் முக்கியம்'' என்று மனசுக்குள்ளிருந்து பேசுகிற அன்னமேரி பாட்டிக்கு வயது 85!

இதோ.. உங்கள் குடும்பத்துக்கும் ஆரோக்கியத்தைக் கொண்டு வருகிறார் அன்னமேரி பாட்டி!

மழை ஓஞ்சி இப்போ பனி அடிக்குதே.. இந்த சீஸனுக்கேத்த மருந்து சொல்றேன்..

குழந்தைகளின் சளிக்கு..

ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை, தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு.. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.

பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சுச் சளிக்கு,,

இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து. பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்குறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப் பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் விலக..

அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊற வச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக் குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்

நாட்டு வைத்தியம்!
அன்னமேரி பாட்டி

'பனி காலம் வந்தாப் போதும்.. இருமலும் சளியும் சிறுசுகளை சட்டுனு பிடிச்சுக்கிட்டு இம்சைப்படுத்தும். அந்த இம்சைகள வெரட்டுற மூலிகைகளப் பார்ப்போம் வாங்க..

குழந்தைகளின் இருமலுக்கு..

சின்ன துண்டு (ஒரு கணு) சித்தரத்தையும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டையும் ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சணும். ஒரு வேளைக்கு ஒரு பாலாடை (சங்கு) அளவு, இதை ஒருநாளைக்கு 3 இல்ல.. 4 வேளை கொடுத்துட்டு வந்தா வறட்டு இருமல் விலகும். மூணு மாச பச்சைக் குழந்தையிலருந்து ரெண்டு வயசுக் குழந்தைங்க வரைக்கும் இதக் கொடுக்கலாம்.

பல்லு மொளச்ச பிள்ளைகளுக்கு, நெய்யில 10 தூதுவளை இலைகள வதக்கி, (பெரியவங்கன்னா.. ஒரு கைப்பிடி இலை) அப்படியே மென்னு தின்ன வச்சா இருமல் அண்டாது!

10 உத்தாமணி இலைகள எடுத்து சாறு பிழிஞ்சிக்கணும். ஒரு பட்டாணி அளவு சுண்ணாம்புல இதைக் கலந்து தொண்டைக் குழியில தடவி வந்தா இருமல் 'சட்'டுனு நிக்கும்.

இருமலும் சளியும் வந்து மூச்சு விட முடியாம சில குழந்தைங்க திணறிப் போயிரும். இந்தக் கோளாறை 'தெக்கத்திக்கணை'னு சொல்லுவாக. இதுக்கு.. தூதுவளை இலைய கசக்கி, அதுல மூணு சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குழந்தைக நாக்குல தடவுங்க. நல்ல குணம் தெரியும்.

இலைகளை எடுத்த தூதுவளை குச்சிய (தண்டு) நல்லா காய வச்சு இடிச்சுப் பொடியாக்கி சலிச்சுக்கணும். இத காத்துப் புகாத டப்பாவுல போட்டு வெச்சிக்கிடுங்க. மிளகு அளவு இந்தப் பொடிய எடுத்து, தேனுல குழப்பி நாக்குல தடவுங்க. இப்படி 4 வேளை கொடுத்திட்டு வந்தா தெக்கத்திக்கணை சரியாப் போயிரும்.

நாட்டுக்கோழி முட்டையோட மஞ்சக் கருவை கரண்டில ஊத்தி, லேசான சூட்டுல காய்ச்சினா எண்ணெய் வரும். இதுல மிளகு அளவு கோரோசனை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கலந்து இழைச்சு, உள்ளுக்குக் கொடுத்துட்டு வந்தா இருமல், கணை இழுப்பு குணமாகும்.

மூணு அங்குல இண்டந்தண்டை குச்சியை (இண்டு) ராத்திரியே ஒரு டம்ளர் தண்ணில ஊற வச்சு, காலையில தண்டை மட்டும் எடுத்து தண்ணி இல்லாம நல்லா துடைச்சிக்கணும். இது குழல் மாதிரி இருக்குறதால ஒரு பக்க துவாரம் வழியா ஊதினா அரை (அ) ஒரு ஸ்பூன் அளவுக்குத் தண்ணி வரும். இந்தத் தண்ணி கூட மிளகு அளவு கோரோசனை கலந்து காலையில வெறும் வயித்துல 3 நாள் தொடர்ந்து கொடுத்து வந்தா கணை இழுப்பு, சளி, இருமல்.. எல்லாம் ஓடியே போயிரும்.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ரத்த சோகையை தடுக்கும் கீரைகள்


கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்தவை..
கீரையில் அப்படி என்ன இருக்கிறது…
* கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
* கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் ஏ, குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ’ ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
* கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்’ வைட்டமின்களையும் கொண்டுள்ளது.
சாப்பிட வேண்டிய அளவு
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான்…
* பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம்.
* பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம்.
* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.
* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
* பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.
சத்துக்கள் முழுவதும் கிடைக்க…
* கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.
* கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.
* கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.
* கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்.
* நாள்தோறும் நம் உடலுக்கு அவசியமான சத்தாக சேர்க்கப்பட வேண்டிய கீரையை நாமும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் நலமே!